சிதம்பரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எறிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை நகர் ஓபி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று காலை திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு மீட்புத்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீயை முற்றிலும் அணைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடியைச் சேர்ந்த வைத்தியநாதசுவாமி என்பவர் தனது பழைய காரை சீரமைக்கும் பணியை முடித்துள்ளார். பின்னர் பரிசோதனை செய்து பார்ப்பதற்காக சீரமைக்கப்பட்ட காரை ஓபி மெயின் ரோட்டில் ஓட்டி வந்த பொழுது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஓபி மெயின் ரோட்டில் சிறிது நேரம் பதற்ற நிலை நீடித்தது. இந்த காரில் சென்று கொண்டிருந்த நான்கு பேரில் இரண்டு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







