ஈரோட்டில் உள்ள இஸ்லாமியர் ஒருவர் வீட்டில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று 2-வது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்தனர். பின்னர் ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென உள்ளே நுழைந்து அதிரடியாக விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டதோடு, இருவரை ஆர்என் புதூரில் உள்ள காவலர் குடியிருப்புக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ.அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தியதோடு, வீட்டில் இருந்த தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் ஈரோட்டில் தேசிய புலனாய்வு முகமை துறையினர் விசாரணை நடப்பதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நாளாகவும் அங்கு சோதனை நடைபெற்று வருகிறது.
காவல்துறை தரப்பில் கூறும்போது, பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24-ம் தேதி கைது செய்து விசாரித்ததாகவும், அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்அளித்த தகவலின் அடிப்படையில் இங்கு விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி உலக அளவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க தமிழ்நாடு வர உள்ள நிலையில் என்.ஐ.ஏ. குழுவினர் ஈரோட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








