நியூஸ்7 தமிழின் நேரடி கள ஆய்வின் விளைவாக உசிலம்பட்டியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் தனியார் வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுகந்தி நேரில் ஆய்வு செய்தார்.
சமீபகாலமாக பாதுகாப்பு குறைபாடுகளின் காரணமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது. சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில், பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட இவ்விவகாரம் குறித்து கல்வி முதன்மை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபடத்தொடங்கினர்.
அந்த வகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளை அதிகளவில் பாதுகாப்பு குறைபாடுகளுடைய வாகனத்தில் ஏற்றிச்செல்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து, மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறித்து நியூஸ்7 தமிழ் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது.
பள்ளி குழந்தைகளை அதிகளவில் பாதுகாப்பு குறைபாடுகளுடன் ஏற்றிச் செல்வதாக தொடர்பாக நியூஸ்7 தமிழ் செய்தியாக வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து, உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் சுகந்தி பள்ளி மாணவ,மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஆவணங்கள் முறையாக உள்ளதா?, குழந்தைகள் பாதுகாப்பாக ஏற்றிச் செல்லப்படுகின்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்தார். பள்ளி மாணவ-மாணவிகளை வாடகை வாகனங்களில் ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வேந்தன்








