சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் 2023 -ஆம் ஆண்டுக்கான நியூஸ் 7 தமிழ் மாணவ ஊடகவியலாளர்கள் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது.
பொறுப்பும் பொது நலனும் என்ற தாரக மந்திரத்தோடு செயல்படும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, ஊடக உலகில் பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2022 -ஆம் ஆண்டு மாணவ ஊடகவியளாளர் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 2023 ஆம் ஆண்டுக்கான மாணவ ஊடகவியலாளர் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூஸ் 7 தமிழின் இந்த மாணவ ஊடகவியலாளர் திட்டம் 2023-ல் சேர தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நேர்காணல் நடத்தப்பட்டு 23 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 23 மாணவர்களுக்கும் செய்தி சேகரிப்பு, ஃபோட்டோஷாப் டிசைனிங், ஒளிப்பதிவு உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் ஐ.டி.ஏ.எஸ் கண்ட்ரோலர் ஆஃப் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ் அதிகாரி ஜெயசீலன் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரிய தலைமை செயல் அதிகாரி ஜெயபிரகாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் மாணவ ஊடகவியலாளர்களுக்கு நியூஸ் 7 தமிழின் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அடையாள அட்டைகளை வழங்கினர். பின்னர், மாணவர்களிடம் உரையாற்றிய நியூஸ் 7 தமிழின் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன் , பொறுப்பும் பொதுநலனும் வெறும் வார்த்தை மட்டுமல்ல, அதன் அடிப்படையில் தான் நியூஸ் 7 தமிழ் செயல்படுகிறது என்றும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ ஊடகவியலாளர்களும் அதன்படி, நடந்துகொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
நியூஸ் 7 தமிழின் மாணவ ஊடகவியலாளர் திட்டத்தில் பயிற்சி எடுக்கவுள்ள மாணவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர். தங்களை போன்ற மாணவர்களுக்கு ஊடகம் குறித்த தெளிவான புரிதல்களை நியூஸ் 7 தமிழ் சிறப்பாக கற்றுக் கொடுக்கிறது என்றும், களத்தில் நின்று செய்திகளை எவ்வாறு சேகரிப்பது என்ற பயிற்சி அலுவலகத்தில் சிறப்பாக அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இது நாளை ஊடகத்துறையில் பயமின்றி கால் பதிப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நியூஸ் 7 தமிழுக்கு மனமார்ந்த நன்றிகள் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
- பி. ஜேம்ஸ் லிசா