டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இன்று நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிவில் குரூப் 1 இல் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இன்று மதியம் ஆஸ்திரியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதல் அரை இறுதி போட்டியில், நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் தற்போது மழைக்காலம் என்பதால் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்த போது ஒரு சில போட்டிகள் நடத்தப்படாமல் போன நிலையில், இரு அணிகளுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாகவே நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தத் தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இந்த நிலையில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியின் போது மழைக்கான வாய்ப்பு 22 சதவிகிதம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், போட்டியின் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானால், லீக் சுற்றுகளின் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடித்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். அப்படி பார்க்கும் பொழுது நியூசிலாந்து அணி குரூப் 1 இல் 7 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. அதே சமயம் பாகிஸ்தான் அணியை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நியூசிலாந்து அணி, ரன்ரேட்டில் முன்னிலை வகித்து +2.133 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
எனவே ஒருவேளை மழை குறுக்கிட்டு, போட்டி இரத்தானால் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணியே இறுதி போட்டிக்கு முன்னேறும். அதே போல குரூப் 2 இல் 8 புள்ளிகள் பெற்று இந்திய அணி முதலிடமும், 6 புள்ளிகளுடன் பாகிஸ்தான் இரண்டாமிடமும் பிடித்துள்ளது. எனவே இரண்டாவது அரையிறுதி போட்டியிலும் மழை குறுக்கிட்டு போட்டி ரத்தானால் இந்திய அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்த டி20 உலக கோப்பை தொடர் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி வெளியேறியது, நெதர்லாந்து, அயர்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகளுக்கு ஆச்சரியம் அளித்தது என பல மாயாஜாலங்கள் இந்த தொடர் முழுவதும் அரங்கேறியது. எனவே இத்தனை போராட்டங்களுக்கு அப்பால் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளனர்.
எனவே உலக கிரிக்கெட் அரங்கில் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக பார்க்கப்படுவது, இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் இறுதிப் போட்டியே. ஆக, மழை குறுக்கீடு உள்ளிட்டவைகள் குறித்து ஏமாற்றம் நிகழ்ந்து விடாமல், போட்டிகள் அனைத்தும் திட்டமிட்ட படியே அரங்கேற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.