ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது…

புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். புத்தாண்டை முன்னிட்டு 2 டன் வண்ண மலர்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவரும் அரோகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பாணபுரீஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பாணபுரீஸ்வரருக்கும் சோம கமலாம்பிகை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும்,உலகம் வளம்பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

 

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ராணிப்பேட்டை புனித தோமையார் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.அப்போது கொரோனா தொற்றிலிருந்து உலகை பாதுகாக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.

சென்னை எண்ணூரில் உள்ள நெட்டு குப்பம் சின்ன அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடுகளையொட்டி, ஒரு லட்சம் வெற்றிலைகளால் கோயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.