கண் கருவிழி மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனையில் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட
அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ராஜாராமன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் திமுக பொறுப்பேற்றதில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இரண்டு முறை
ஆய்விற்கு வந்துள்ளேன். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 11 லட்சத்து 3 ஆயிரமும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 25,717 குடும்ப அட்டைகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22,633 குடும்ப 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மற்ற மாநிலங்களில் கண் கருவிகள் மூலம் ரேசன் பொருட்களை வழங்கி வருவதாகவும், அதனை நமது மாநிலத்திலும் சிறப்பு திட்டமாக செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியில் சரியாக இருக்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 169 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 44,467 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 89,694- மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் தவறு செய்த 27 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2-பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அதிகாரிகளிடம் விவசாயிகளிடத்தில் எந்த பணமும் வாங்க கூடாது என வலியுறுத்தி உள்ளதாகவும், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தபோது விவசாயிகள் இடத்தில் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு இருந்ததாகவும், அதுதொடர்பாக மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.