நரேந்திர மோடியை போன்ற பிரதமரை எனது அரசியல் வாழ்க்கையில் பார்த்தது இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடக சோப் அண்ட் டிடர்ஜெண்ட் நிறுவனம் சோப் தயாரிக்க தேவையான மூலப் பொருள்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி அளிக்க ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றபோது பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் எம்.வி.பிரசாந்த்குமாரை லோக் ஆயுக்த போலீஸார் கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், மைசூரு சோப் நிறுவனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பாவின் அலுவலகம், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை கணக்காளரும், விருபாக்ஷப்பாவின் மகனுமான எம்.வி.பிரசாந்த்குமார் வீட்டில் சோதனை செய்தபோது, கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த ரூ.8.12 கோடி ரொக்கப் பணத்தை லோக் ஆயுக்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக சோப் அண்ட் டிடாஜென்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை மாடால் விருபாக்ஷப்பா ராஜிநாமா செய்தார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பாவை கைது செய்ய 3 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார். அப்போது, நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றப்பட வேண்டுமானால் பாஜகவை தூக்கி எறிய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிவாயு பொருள்களின் விலைகளை உயர்த்திவிட்டனர். இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவினர் அரசியல் சாசனத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். பாஜக சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதாகவும், ஆளும் கட்சி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயும், பல்வேறு சாதியினரிடையேயும் மோதல்களைத் தூண்டி வருகிறது. இதனை மக்கள் கவனிக்க வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் இப்படிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்குப் பதிலாக, பள்ளிகளில் என்ன ஆடைகள் அணிய வேண்டும், உணவுப் பழக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கியப் பிரச்னை. இந்த பாஜக அரசை மே மாதத்தில் நடைபெறவிருக்கும் கர்நாக சட்டப்பேரவைத் தேர்தலின்போது புறக்கணித்து, அனைத்து தரப்பு மக்களுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கர்நாடகாவில் பாஜகவின் மற்ற முறைகேடுகள் மற்றும் திட்டங்களில் 100 சதவீதம் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய கார்கே, தனது 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் மோடியை போன்ற மோசமான பிரதமரை பார்த்தது இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.