ரஜினியுடன் சேர்ந்து நடனமாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என நடிகர் ரக்ஷன் தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மனசிலாயோ, ஹண்டர் வன்ட்டார் பாடல்கள் வெளியாகி தற்போது வரை இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
முன்னதாக ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோரின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்தது. இந்த நிலையில், நடிகர் ரக்ஷன் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் குறித்தும், ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்தும் பேசியுள்ள வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் நடிகர் ரக்ஷன் பேசியதாவது:
“வேட்டையன் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘தரண்’. இந்த கதாபாத்திரம் உங்கள் அனைவரும் மிகவும் பிடிக்கும். சமூக வலைத்தளத்தில் உள்ள நுணுக்கங்களை சிறப்பாக கையாளக்கூடிய கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். ரஜினியுடன் சேர்ந்து நடனமாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை, ஆனால் அவருடன் என்னை நடனமாட வைத்த டான்ஸ் மாஸ்டர் தினேஷ் அவர்களுக்கு பெரிய நன்றி. “
இவ்வாறு நடிகர் ரக்ஷன் தெரிவித்துள்ளார்.







