போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
இதில், கொரோனா விதிகளைப் பின்பற்றி ஒவ்வொரு தொழிற்சங்கத்திலும் பேச்சுவார்த்தைக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே ஆறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஏழாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொழிலாளர்களின் பெரும்பான்மை கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்குத் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், கடந்த பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடந்து மூன்று ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட இரு முக்கிய கோரிக்கைகளின் நிறைவேற்ற வலியுறுத்தி இன்றைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.








