36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்” – குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு!

“நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்” என குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

2 நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,  சென்னை அருகே உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் பின்னர் அவர் அங்கிருந்து,  சென்னை விமான நிலையம் வந்தார்.  அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.  அப்போது,  நீட் விலக்கு மசோதாவுக்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

” தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதைக் கருத்தில் கொண்டு,  தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.  இந்தச் செயல்முறை கடந்த காலங்களில் மாநிலத்தில் நல்ல பலன்களை அளித்ததது.  மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதால், அதைத் தொடர்ந்து மத்திய அரசின் சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து,  மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிட நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும்,  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021’ (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021) நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த தீர்மானம் தமிழ்நாடு ஆளுநருக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டது.  ஆளுநர்  5 மாத காலத்திற்குப் பிறகு,  மேற்படி சட்டமுன்வடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பிய நிலையில், 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு,  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டிஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் பின்னர், மேற்படி சட்டமுன்வடிவு  தமிழ்நாடு ஆளுநர்  மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு,  ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.  இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்,  மத்திய உயர்கல்வித் துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும்,  மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பிறகும் இந்த விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, 14-8-2023 அன்று தான் கடிதம் எழுதியிருந்ததேன்.  அதில், நீட் தேர்வினால் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாணவர்கள் தற்கொலைகள் குறித்தெல்லாம் குறிப்பிட்டு, இனியும் தாமதிக்காமல் மேற்படி சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென தான் கோரியிருந்தேன்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்த சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது.  இந்தச் சூழ்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளது.

தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளது.  இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என  இந்தியக் குடியரசுத் தலைவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading