நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சந்திப்பின்போது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
மேலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு விதிமுறைகளை கைவிடுமாறும், தமிழ்நாட்டில் உள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகளை நிறுவ ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இவை மட்டுமின்றி, உக்ரைனில் மருத்துவம் படித்துவிட்டு நாடு திரும்பிய மாணவர்கள், இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிப்பை தொடர ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மருத்துவக் கல்லூரியில் நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம் குறித்த எம்.டி படிப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தினார்.