ஐசிசி விதிகளை விமர்சித்த நியூசிலாந்து வீரர்கள்

2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஐசிசியின் பவுண்டரி கவுண்ட் விதியால் தோல்வியை தழுவியதை, யூரோ கோப்பையுடன் சுட்டிக்காட்டி நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம், முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் விமர்சித்துள்ளனர். யூரோ கோப்பை கால்பந்து…

2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஐசிசியின் பவுண்டரி கவுண்ட் விதியால் தோல்வியை தழுவியதை, யூரோ கோப்பையுடன் சுட்டிக்காட்டி நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம், முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது ட்விட்டரில் பதிவிட்ட நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் நீஷம், ”வெற்றியாளரை தீர்மானிக்க ஏன் பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது? எந்த அணி அதிக முறை பாலை பாஸ் செய்ததோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம் அல்லவா?” என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

அதாவது, 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. அப்போது இரு அணிகளின் ஸ்கோரும் ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. அதிலும் இரு அணிகளின் ஸ்கோரும் சமனில் முடிந்ததால், ஐசிசி விதிகளின்படி, போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே விமர்சனத்திற்குள்ளானது. முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்த நியூசிலாந்தின் கனவுகளுக்கு ஐசிசியின் பவுண்டரி கவுண்ட் விதி முட்டுக்கட்டை போட்டது. இதனை விமர்சிக்கும் விதமாக ஜேம்ஸ் நீஷம் ட்விட்டரில் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

 

இதே போல, நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும். கிரிக்கெட் வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்காரிஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், யூரோ இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கே அதிக கார்னர்கள் கிடைத்தது. எனவே, அவர்கள்தானே சாம்பியன்கள் என பதிவிட்டிருந்தார்.

நியூசிலாந்து கிரிக்கெட் வீர்கள் ஐசிசி விதிகளை விமர்சித்து வெளியிட்ட பதிவுகள் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.