நீட் தேர்வு எழுத அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில், அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்பங்கள் பெற துவங்கிய சில…

மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில், அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு விண்ணப்பங்கள் பெற துவங்கிய சில மணி நேரங்களில், தமிழகம், புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாக அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த வீரபிள்ளை ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாதபோது, மற்றவை என்று குறிப்பிட்டால், அதை பரிசீலித்து, அவர்களின் மாநிலத்துக்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், தேர்வு மையங்களை அதிகரிக்க தற்போது உத்தரவு பிறப்பித்தால் அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தனர்.

மேலும், மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே தேர்வு எழுதும் வகையில், அடுத்த ஆண்டு கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் எனவும் தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.