நீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் மீண்டும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநருடன் தமக்கு தனிப்பட்ட விரோதமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்காதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், தாம் ஆட்சி நடத்தும் விதத்தை பொது மேடையிலேயே ஆளுநர் பாராட்டியதை சுட்டிக்காட்டினார். மேலும், ஆளுநர் பழகுவதற்கு இனிமையானவர் எனக்கூறிய முதலமைச்சர், ஆளுநருடன் தமக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை என்றும், சுமூகமான உறவு உள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும், ஆளுநருக்கு உண்டான மரியாதையை தாம் தொடர்ந்து வழங்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என சாடினார். பொது வாழ்வில் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதே தலையாய கடமை என குறிப்பிட்ட அவர், நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதே ஆளுநரின் முக்கியமான பணி என சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாட்டு முதலமைச்சராக, சட்டமன்றத்தின் மாண்பைக் காக்கும் பொறுப்பு தமக்கு உள்ளதால் தான், தேநீர் விருந்தை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: இளையராஜாவுக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஜே.பி.நட்டா கண்டனம்
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், தேவைப்பட்டால் மீண்டும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஏராளமான வலிகளையும் அவமானங்களையும் தாம் சந்தித்து வந்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இது தமக்கு ஒரு பொருட்டல்ல என தெரிவித்தார்.
எல்லா வலிகளையும் அவமானங்களையும் புறந்தள்ளிவிட்டு தமது கடன் பணி செய்து கிடப்பதே என்ற வகையில் பணியாற்றி வருவதாக கூறிய அவர், அப்படித்தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.