பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா- நயினார் நாகேந்திரன் சந்திப்பு..!

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த அண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தேர்தல் மற்றும் கூட்டணி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.  இச்சந்திப்பு டெல்லி மோதிலால் நேரு மார்க் பகுதியில் அமைந்துள்ள ஜே பி நட்டாவின் இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணம்  தொடர்பான விவரங்களை தேசிய தலைவரிடம் சமர்பித்தார். மேலும்  சுற்றுப்பயணம் மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பு தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகவும், சுற்றுப்பயண துவக்க விழாவில் தேசிய தலைவர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன்  வருகின்ற அக்டோபர் 2ம் வாரம் முதல் தமிழ்நாட்டில் தேர்தலுக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.