நடிகை நயன்தாரா தனது 37 வது பிறந்த தினத்தை ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்புத் தளத்தில் இன்று கொண்டாடி இருக்கிறார்.
நடிகை நயன்தாரா, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இதில் விஜய் சேதுபதி, ராம்போ என்ற ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஊந்திரன் என்ற கேரக்டரிலும் சமந்தா, கதீஜா என்ற பெயரிலும் நயன்தாரா, கண்மணி என்ற பெயரிலும் நடிக்கின்றனர். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கும் ’கனெக்ட்’, அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தனது 37 வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா, ‘அவள் வந்தாள், அவள் கண்டாள்,அவள் தைரியம் கொண்டாள், அவள் கனவு கண்டாள், அவள் செயல்படுத்தினாள், அவள் வென்றாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நயன்தாரா’ என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Samanthaprabhu2/status/1461256925237051396
ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.









