தேசிய சீனியர் மகளிர் கால்பந்து – வெற்றி கோப்பையுடன் சென்னை திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!

தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு திரும்பிய பெண்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று…

தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு திரும்பிய பெண்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு – ஹரியாணா அணிகள் மோதின.இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

50-வது நிமிடத்தில் தமிழ்நாடு வீராங்கனை துர்கா ‘சுய கோல்’ அடித்தார். இதனால் ஹரியாணா 1-0 என முன்னிலை பெற்றது. எனினும் அடுத்த 7-வது நிமிடத்தில் பிரியதர்ஷினி கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. தொடர்ந்து 83-வது நிமிடத்தில் இந்துமதி கார்த்தீசன் கோல் அடித்து அசத்தினார். இதனால் தமிழ்நாடு அணி 2-வது முறையாக கோப்பையை வென்றது. கடைசியாக 2017-18-ம் சீசனில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ்நாடு அணி பட்டம் வென்று அசத்தி உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற 27 வது சீனியர் மகளிர் கால்பந்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பிய நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சிறப்பு வரவேற்பானது அளிக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான 22 வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மேலாளரான ரெஜினா தலைமையில் சிறப்பு வரவேற்பானது தரப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மேளதாளங்கள் கலை நிகழ்ச்சிகளும் ரயில் நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது;

சீனியர் கால்பந்து சாம்பயன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியுடன் சேர்த்து மொத்தம் பத்து போட்டிகள் நடைபெற்றது. லீக் முதல் இறுதி போட்டி வரை அனைத்திலும் அதிக கோள்கள் பெற்று வெற்றி பெற்றோம். சில போட்டிகளில் மழையின் காரணத்தால் சற்று சிரமம் ஏற்பட்டது. சில மாநில அணிகளுடன் போட்டி கடினமாக இருந்த பொழுதும் தங்கள் அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாக வெற்றியினை பதிவு செய்திருக்கிறோம். இந்த போட்டியில் கலந்துகொள்ள அரசு எங்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளது.

மேலும் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளோம். அதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.