33.5 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தேசிய கல்விக் கொள்கை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்தப்படும் – மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தகவல்

தேசிய கல்விக் கொள்கையை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்த உள்ளதாக மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

ஜி-20 நாடுகளின் கல்வி கருத்தரங்கம் சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்றது. இதில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, “கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம்
நடைபெற்றது. குறிப்பாக பள்ளிக்கல்வி கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாடு
உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி கல்விக்காக குழு கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டவை நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள கல்வி செயற்குழு கூட்டத்தில் பேசப்படும்.

இந்த சிறப்பான கருத்தரங்கத்தின் மூலம் தெளிவாகப் புரிவது, ஜி 20 உறுப்பினர்களான 20 நாடுகள் மற்றும் 9 நட்பு நாடுகள் இணைந்து அரசாங்க ரீதியில் மட்டுமின்றி கல்வி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பது, உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகத்தான் உள்ளது.

கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு வருவதன் சிக்கல்கள் குறித்து பல்வேறு வகைகளில் விவாதிக்கப்பட்டது. அதில் உள்ள சவால்களை எப்படி மாற்றி அமைப்பது, எப்படி மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க முடிந்தது. அது, மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு புதிய தொழில் முனைவோர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

எதிர்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியின் தேவை உள்ளது என்பதை நம் முழுமனதோடு ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தேசிய கல்விக் கொள்கை திறன் பள்ளிக் கல்வியில் இருந்து தொடங்குகிறது. ஐஐடி போன்ற நிறுவனங்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்றி, பாலிடெக்னிக் தொழிற்கல்வி மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்க தயாராக உள்ளது. பிரதான கல்வி திட்டத்துடன் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய கல்வி கொள்கையின் சிறப்புகளை எடுத்துரைத்தோம்.

ஜி20 கல்வி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் கல்வித்துறையில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும். கடந்த 15 வருடங்களாக கல்வித் துறையின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சுணக்கமாக உள்ளது. கொரோனாவிற்கு பிறகு இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. எனவே இடைநிற்றலை குறைப்பது தொடர்பாகவும், பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஜி20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் பிரதிநிதிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பலதரப்பட்ட வாய்ப்புகள் புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும்.

உலக நாடுகளுடன் போட்டி போடுவதற்கு இது போன்ற கொள்கைகள் அவசியம். தொழில்நுட்ப கல்வி மட்டுமின்றி மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்ப்பது தொடர்பாகவும், தொழில் முனைவோர் ஆக்குவதற்காகவும் பயிற்சி புதிய கல்விக் கொள்கையில் தரப்பட உள்ளது. தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்வி நிறுவனங்கள் செயல்படுவது தான் வருங்கால தேவையாக இருக்கும்.

அனைத்து பிராந்திய மொழிகளிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படும். சென்னையை தொடர்ந்து பூனே, அமர்தசரஸ் போன்ற இடங்களில் கல்வி கருத்தரங்கம் நடைபெறும். இந்தியாவில் திறன் பெற்ற ஆசிரியர்கள் மிக அதிகமாகவே உள்ளனர்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பள்ளிக்கல்வி செயலாளர் சஞ்சய் குமார், ”இந்தியாவைத் தாண்டி அனைத்து நாடுகளும் தங்களது கருத்துக்களை இந்த கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர், அதிலிருந்து எதிர்கால கல்வியில் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்காற்ற உள்ளது என்பது தெளிவாகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தான் நம்ம இணைக்க முடிந்தது. அது நமக்கு சிறந்த பாடத்தையும் கற்றுக் கொடுத்தது.

2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்த பட்சம் 50% பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் அது 100% ஆக வேண்டும். இதுதான் தேசிய கல்வி கொள்கையின் நோக்கம். இந்த கருத்தரங்கம் மிக சிறப்பான வாய்ப்பு. மற்ற வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், அனைத்து நாடுகளின் கூட்டமைப்பு மூலம் ஒவ்வொரு நாடுகளும் பயனடையும்.

சிறந்த ஆசிரியர்களை உருவாக்க, 2030 ஆம் ஆண்டு பிஎட் படிப்பு நான்கு வருடப் படிப்பாக மாற்றப்படும். மேலும் கிராமங்கள் தோறும் இணையதள வசதி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்த உள்ளோம்.

10, +2 என இருக்கும் தேர்வு முறையை 5+2+3+4 என மாற்ற உள்ளோம். திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தமிழ்நாடு அரசின் ’நான் முதல்வன் திட்டம்’ சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று மற்ற மாநிலத்திலும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

பலதரப்பட்ட வாய்ப்புகள் புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும். திறன் வாய்ந்த தொழில்நுட்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக புதிய கல்விக் கொள்கை இருக்கிறது. அதை அமல்படுத்துவது சிறந்ததாக இருக்கும். உலக நாடுகளுடன் போட்டி போடுவதற்கு இது போன்ற கொள்கைகள் அவசியம். தொழில்நுட்ப கல்வி மட்டுமின்றி மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்ப்பது தொடர்பாகவும், தொழில் முனைவோர் ஆக்குவதற்காகவும் புதிய கல்விக் கொள்கையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading