கமல்ஹாசனுடன் இணையும் நரேன்

கைதி படத்தைத் தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார் நரேன். தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களுக்கு…

கைதி படத்தைத் தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார் நரேன்.

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நரேன். அதன்பிறகு இவர் நடித்த தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்கள் பெரிதாக பேசப்படவில்லை.

மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தின் வில்லனாக நடித்த அவர், அதன்பிறகு மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இடையில் நரேன் நடிப்பில் விவசாய பிரச்சினைகளைப் பேசி வெளியான கத்துக்குட்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன்பிறகு சிறு இடைவெளி எடுத்துக்கொண்ட நரேன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற கைதி திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் “விக்ரம்” படத்தில் நடிகர் நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இது என் வாழ்நாளில் மிக முக்கியமான படம். கைதி படத்திற்குப் பிறகு நான் இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்தேன். விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தான் அவர், உங்களுக்கு இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் உள்ளது என்று என்னிடம் சொன்னார்” எனக் குறிப்பிட்டார். மேலும், “இதன்மூலம் ஒரு கனவு நிறைவேறியதை போல உணர்வு பெறுகிறேன். உலக நாயகன் கமல்ஹாசனை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன் இது ஒரு மகிழ்ச்சியான செய்தி” என உளம் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

நரேன் இணைந்துள்ளதன் மூலம் விக்ரம் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.