நாமக்கல் அருகே தூங்கிக்கொண்டிருந்த மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் தனது மனைவி சங்கீதா இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி சங்கீதா வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி வருவதாக செந்திலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வடுகத்தில் உள்ள தனது தாயார் இல்லத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ராசிபுரத்தில் இந்திரா நகர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செந்தில் வந்துள்ளார். அங்கு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகன்கள் அலறி அடித்து வெளியே ஓடி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அருகில் வசிப்பவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் காவல்துறையினர். ஓட்டுநர் செந்திலை கைது செய்ததுடன், சங்கீதா உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியை கல்லால் தாக்கி கொடூரமாக கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







