காதலி இறப்பில் மர்மம் : ‘காதலன்’ புகாரில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு!

பல்லடம் அருகே காதலன் அளித்த புகாரின் அடிப்படையில் உயிரிழந்த காதலியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய முடிவு…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி
மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா. 22 வயதுடைய வித்யா கோவை அரசு
கல்லூரியில் முதுகலை பட்டம் பயின்று வந்துள்ளார்.

திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞர் அதே கல்லூரியில்
வித்யாவுடன் படித்து வந்துள்ளார். மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெண்மணி, வித்யாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாகவும், பெண் கொடுக்க வித்யாவின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (மார்.30) வித்யாவின் பெற்றோர்கள் கோயிலுக்கு சென்று திரும்பிய நிலையில், வித்யா மீது பீரோ
விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வித்யாவின்
பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வித்யாவின் உடலை அருகில் இருந்த
சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

இதனையடுத்து வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் இன்று வித்யாவின் வீட்டில் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்துள்ளனர்.

மேலும் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வித்யா ஆணவக்கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.