“யூடியூப் வீடியோவில் பதிவாகியிருந்தது என்னுடைய குரல் அல்ல” யூடியூபர் மதன் மனைவி பேட்டியளித்துள்ளார்.
பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில் ரகசியமாக விளையாடப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பப்ஜிக்கு மாற்றாக “ஃப்ரீ பயர்” எனும் விளையாட்டு இணையத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படுகிறது. இந்த விளையாட்டுகளை எவ்விதம் சிறப்பாக விளையாடுவது குறித்து, மதன் என்பவர் யூடியூப் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் தனது முகத்தை காட்டாமல் குரலை மட்டும் பதிவிட்டு காணொளிகளைப் பதிவேற்றம் செய்து வந்த நிலையில், அதில் ஆபாச வார்த்தைகளைப் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது. விளையாட்டில் தன்னுடன் ’சாட்’ செய்யும் பள்ளி சிறுமிகளின் வலைப்பக்கங்களுக்குச் சென்று பாலியல் ரீதியாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மதன் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதனின் மனைவி கிருத்திகா இன்று செய்தியாளரை சந்தித்தார். அதில், ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்ணின் குரல் தன்னுடையது அல்ல என்றும், 159 புகார்கள் இதுவரை மதன் மீது வந்துள்ளது என கூறுவதில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களிடம் அதிக அளவிலான பணம் புழங்குவதாக கூறியிருப்பது பொய் என்றும், தங்களிடம் ஆடி (AUDI) கார் மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தங்கள் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் நான்கு நபர்கள் மீண்டும் மீண்டும் புகார் கொடுத்துள்ளதாகவும், அதனடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும் கிருத்திகா கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த மதனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.