தன் மீது அன்பு உள்ளவர்களுக்கு என் வீடு எப்போதும் திறந்து இருக்கும் என டிவிட்டர் பக்கத்தில் நடிகர் லெஜண்ட் சரவணன் அருள் பதிவிட்டுள்ளார்.
சரவணா ஸ்டோர் உரிமையாளரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் அருள் அண்மையில் தி லெஜண்ட் என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடிகராகவும் நடித்திருந்தார். இந்தப்படம் பான் இந்தியா படமாக உருவாகி, நல்ல வரவேற்பை பெற்றது. சிலர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தாலும் லெஜண்ட் திரைப்படம் எதிர்ப்பார்த்த வசூலை எட்டிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அடுத்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் லெஜண்ட் சரவணன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் வந்து செல்லும் அவர் அதில் பதிவிடும் பதிவுகளால் திடீரென வைரலாகி விடுகிறார். சமீபத்தில் அவர் நடிகர் ரஜினிகாந்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதனை இணைய வாசிகள் வைரலாக பரப்பி வந்தனர்.
இந்நிலையில், தற்போது தனது வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன் மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்திருக்கும் என கூறி பொதுமக்கள் அவர் வீட்டில் இருக்கும் புகைப்படங்களையும் லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள். இதுவரை எந்த பெரிய நடிகராவது இது போல் ஏழைகளுக்கு வயிறார சாப்பாடு போட்டிருக்கிறார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அது போல் இந்த அன்னதான சேவையை தொடருங்கள் என வாழ்த்தியுள்ளார்கள். சிலர் வீட்டிற்கு பதில் உங்கள் கடைகளில் தங்களை இலவசமாக அனுமதித்தால் மகிழ்ச்சியாக துணிகளை எடுத்து செல்வோம் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.
-இரா.நம்பிராஜன்









