கடவுளை இழிவாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது “வேலை” கையில் எடுத்துவிட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோவையில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், கடவுளை இழிவாக பேசியவர் கையிலேயே இன்று முருகன் வேலை வழங்கியுள்ளார் எனக்கூறினார். உள்ளே ஒன்றும், வெளியே ஒன்றும் பேசும் ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார் எனவும், அதிமுகவுக்கே முருகன் வரம் கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக அனைத்து மதங்களையும் சமமாக எண்ணுகிறது என்றும், தேர்தல் வந்துவிட்டதால் திமுக பகல் வேஷம் போடுகிறது எனவும் விமர்சித்தார். கடவுள் உரிய நேரத்தில் உரிய தண்டனையை தேர்தல் மூலம் தருவார் என கூறியுள்ளார். மேலும், ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில புலியகுளம் பகுதியில் கலை அறிவியல் கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.







