ராஜீவ்காந்தி கொலையில் குற்றவாளிகள் என்று சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டவர்களை ஹீரோக்களாக்க வேண்டாம் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவருடன் உயிரிழந்த மற்ற தமிழர்களையும் யாரும் பேசுவது கிடையாது என குறிப்பிட்டார். மேலும் தண்டனை வழங்கப்பட்டவர்கள், ஒரு காலத்திற்கு பிறகு சட்டரீதியாக விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காவல்துறையினரிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள்தான் பாஜகவில் தஞ்சமடைகின்றனர் என விமர்சித்தார். மேலும், கமல் கட்சியின் கொள்கை மதச்சார்பின்மையை சார்ந்துள்ளதால் அவர் திமுக -காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்பதை தான் விரும்புவதாக கூறினார். மேலும், கமல் தனித்து போட்டியிட்டால் சொற்ப வாக்குகள் தான் பெறுவார் என்றும், அவர் தொடர்ந்து அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால் தேர்தலில் சாதுர்யமான முடிவுகள் எடுக்க வேண்டும் எனவும் கார்த்தி சிதம்பரம் பேசினார்.







