காமெடியன்களுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் காமெடி நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான வீர் தாஸ் சர்ச்சையில் சிக்கினார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் அவர் நடத்திய காமெடி நிகழ்ச்சியில், ’இரண்டு விதமான இந்தியாவில் இருந்து வருகிறேன். 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகமுள்ள நாட்டில் இருந்து வருகிறேன். ஆனால் 150 ஆண்டு பழமையான கருத்துள்ள 75 வயதுகாரர் சொல்வதை கேட்க வேண்டியிருக்கிறது’ என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெளிநாடுகளில் இந்தியாவை இழிவுப்படுத்துவதாகக் கூறி டெல்லி பாஜக, போலீசில் புகார் கொடுத்தது, வீர் தாஸ் மீது. ’அது சும்மா காமெடிக்காக பேசினேன். அதை சீரியசா எடுத்துக்க வேண்டாம். நான் இந்தியாவை மதிக்கிறேன்’ என்று விளக்கம் அளித்திருந்தார் அவர்.
![](https://i0.wp.com/news7tamil.live/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-29-at-10.02.57-AM.jpeg?resize=800%2C450&ssl=1)
இந்நிலையில், பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான முனவர் பரூக்கியின் காமெடி நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்திருக்கிறது பெங்களூரு போலீஸ்! குஜராத்தை சேர்ந்த பரூக்கியின் குடும்பம், அங்கு 2002 -ஆம் ஆண்டு நடந்த வன்முறையை அடுத்து மும்பைக்கு இடம்பெயர்ந்தது.
பாலிவுட், இந்திய கலாச்சாரம் உள்ளிட்டவற்றை கலாய்த்து அவர் அடிக்கும் காமெடிக்கு ஏக வரவேற்பு. சமூக வலைதளங்களில் அவர் காமெடிக்கு மவுசு அதிகரிக்க, இந்தியா முழுவதும் பிரபலமானார், பரூக்கி. இந்த வருட தொடக்கத்தில் இந்து தெய்வங்களை அவதூறாகப் பேசியதாகக் கூறி அவரை கைது செய்தது மத்திய பிரதேச போலீஸ். பிறகு அவர் ஜாமீனில் வந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள குட் ஷெப்பர்ட் ஆடிட்டோரியத்தில் அவருடைய ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று நடக்கவேண்டிய நிகழ்ச்சியை கடைசி நேரத்தில் திடீரென்று ரத்து செய்துவிட்டார்கள்.
போலீஸ் சொல்லும் காரணம், அவர் சர்ச்சைக்குரியவர் என சில இந்து அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரத்து செய்ததாகத் தெரிவித்துள்ளது.
இதுபற்றி சமூக வலைதளத்தில் பதிர்ந்துள்ள பரூக்கி, பெங்களூரு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. வெறுப்பு வென்றுவிட்டது, கலைஞன் தோற்றான். நான் முடித்துவிட்டேன், குட்பை, அநீதி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு 600 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருந்தன. நான் சர்ச்சையான எதையும் பேசவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் வந்ததால், கடந்த 2 மாதத்தில் 12 நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதான் முடிவு என நினைக்கிறேன். என் பெயர் முனவர் பரூக்கி, அதுவே என் நேரம். நீங்கள் சிறந்த பார்வையாளர்கள் என்று தெரிவித்துள்ளார்.
குட்பை என்றும் இதுதான் முடிவு என நினைக்கிறேன் என்றும் அவர் கூறியிருப்பதால், இனி அவர் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை நடத்தமாட்டார் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தும் ஆறுதல் கூறியும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி, சசிதரூர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இது வருந்தத்தக்கது. கருத்துச் சுதந்திரத்தை முடக்குவது பல வடிவங்களில் நடக்கிறது. ஆனால், ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பது அற்பமானது மற்றும் வெட்கக் கேடானது என்று தெரிவித்துள்ளது
இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.