ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணிக்கு தூய்மைப் பணியாளர் சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அரசு மருத்துவமனை அண்மையில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த சீரஞ்சீவி என்பவர் தனது மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். அங்கு குழந்தை வயிற்றினுள்ளேயே உயிரிழந்து விட்டதாக கூறி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை அகற்றி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் சீரஞ்சீவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர், செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவர்கள் முறையான சிகிச்சை வழங்கவில்லை என்றும், செவிலியர்களின் தொலைப்பேசி வழிகாட்டுதல்படி தூய்மை பணியாளர்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.







