மும்பை கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு!

மும்பையில் கனமழை காரணமாக 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையின் மங்கூர்த் பகுதியில் உள்ள ஹனுமான் மந்திர் பின்புறம், ஜனதா நகரில் உள்ள 3 மாடிக் கட்டிடம் நேற்று பெய்த கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இடிந்து விழும் நிலையில் இருந்த இரண்டு பாழடைந்த கட்டிடங்களை பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பே காலி செய்ததாகவும், இருப்பினும் விளையாடச் சென்ற குழந்தைகள் மற்றும் உள்ளூர் வாசிகள் சிலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல குர்லாவில் ஒரு கடையின் மீது மரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.