முல்லை பெரியாறு விவகாரத்தில், அனைத்து அதிகாரமும் அணையின் மேற்பார்வை கண்காணிப்பு குழுவுக்கே இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், அணை மேற்பார்வை கண்காணிப்பு குழுவின் அதிகாரத்தை அதிகரிப்பது, குழுவை வலுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இதில், அணை பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரையில், முல்லைபெரியாறு அணையின் மேற்பார்வை குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளதாகவும், இச்சட்டம் முழுமையாக அமலுக்கு வந்தவுடன், மேற்பார்வை குழு தனது அதிகாரம் முழுவதையும் சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குழுவை வலுப்படுத்தும் வகையில் இரு மாநிலத்தில் இருந்தும் தலா ஒரு நிபுணரை கூடுதலாக மேற்பார்வை குழுவில் இணைப்பதாகவும், இதில், ஒரு மத்திய அரசு வல்லுனரும் இடம்பெறுவார் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் அணையின் கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவுகள், பரிந்துரைகளை இரு மாநிலமும் கடை பிடித்து, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும், அணை மேற்பார்வை குழுவின் உத்தரவுகளை மதிக்காமல் இருந்தால் அது நீதிமன்ற அவமதிப்பு என்பதோடு, கடும் நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும் எனவும் நீதிபதிகள் காட்டமாக குறிப்பிட்டனர்.







