டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட தோனி சம்மதித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரை நடக்க உள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறும்போது, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ். தோனி செயல்படுவார். அவரிடம் பேசினேன். பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று ஆலோசகராக செயல்பட அவர் சம்மதித்துள்ளார். இது மகிழ்ச்சியான விஷயம். இந்திய அணியுடன் இணைந்து அவர் செயல்படுவார்’ என்று தெரிவித்துள்ளார்.








