மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார், என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், விசைப்படகுகளை பாதுகாக்கும் வகையில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அணை கட்டப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மீனவர்களின் படகுகளுக்கு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கனிமொழி, மீனவர்களுக்கு, திமுக ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற நலத் திட்டங்கள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதியை, 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் எனவும், கனிமொழி தெரிவித்தார்.







