கொரோனா நிவாரண உதவி பெற நல வாரியத்தில் பதிவு செய்யாத திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரானா இரண்டாம் அலை காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரானா நிவாரண உதவியாக ரூபாய் 4-ஆயிரம் வழக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரண உதவி நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாத திருநங்கைகளுக்கும் இந்த நிவாரண தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என திருநங்கை கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி சுப்பையா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “திருநங்கைகளில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 11,449 திருநங்கைகளில் ரேஷன் அட்டை வைத்துள்ள 2,956 பேருக்கு இதுவரை நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 8,493 பேருக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், கொரானா நிவாரண உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்பதால், திருநங்கை என தங்களை அடையாளப்படுத்திக்கொள்வோர் அதற்கான உரிய மருத்துவம் மற்றும் இதர சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரங்களை அளித்து கொரோனா நிவாரண உதவியை பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.
மேலும், உதவித்தொகை பெறாமல் விடுபட்டவர்கள் குறித்து தெரிவிக்க ஏதுவாக வழக்கின் விசாரணையை நீதிபதிகள், மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.







