“அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிப் பாடம் கட்டாயம்” – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு !

பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (ஐசிஎஸ்இ) மற்றும் பிற கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளில் பஞ்சாபி மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் வகையில், கடந்த 2008-இல் சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்தச் சட்டத்தை அனைத்துப் பள்ளிகளும் முழு அளவில் பின்பற்றாத சூழலில், தற்போது ஆம் ஆத்மி அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “2008 ஆம் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பஞ்சாபி மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது. இதனை பின்பற்றாத பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்ட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை சர்ச்சையான நிலையில், தெலங்கானாவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக கற்பிப்பதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.