நாட்டில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் யாசகம் பெறுவதாகவும், லட்சத்தீவில் வெறும் 2 பேர் மட்டுமே யாசகம் பெறுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாட்டில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் யாசகம் பெறுகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. யாசகம் பெறுபவர்கள் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் தமிழ்நாடு 15வது இடத்திலுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா? என மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு இன்றுவரை நாட்டில் 4,13,670 பேர் யாசகம் பெறுகிறார்கள். இதில் 61,311 பேர் 19 வயதிற்கும் கீழ் உள்ளவர்களாவார்கள்.
இதேபோல், 2,045 பேர் எந்த வயதினர் என்பது குறிப்பிட வில்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி மேற்குவங்க மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் யாசகம் பெறுபவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நாட்டில் யாசகம் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 81,244 பேர் மேற்கு வங்க மாநிலத்தில் இருப்பதாகவும், குறைந்தபட்சமாக லட்சத்தீவில் 2 பேர் மட்டுமே யாசகம் பெறுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 6,814 பேர் யாசகம் பெறுவதாகவும், இதில் 782 பேர் 19 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் 5,993 பேர் 19 வயதை கடந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.