புதிதாக தொழில் தொடங்கும் பெண் தொழில் முனைவோருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “டெக்ஸ் பேர்-2022” கண்காட்சியில் மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் காந்தி, சக்கரபாணி மற்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி நிறுவனத்தை மத்திய அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஏற்றுமதியில் மேக் இன் இந்தியா திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ஏற்றுமதிக்கு திட்டமிடப்படுள்ளது. இதன் மூலம் கோடிக்கனக்கானோருக்கு வேலை வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
புதிதாக தொழில் தொடங்கும் பெண் தொழில் முனைவோர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். மாற்றுதிறனாளிகள் தொழில் துறையில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். சர்வதேச தலைவர்களுடன் பிரதமரின் நட்புறவு காரணமாக வர்த்தகம் எளிதாகியுள்ளது. பருத்தி குறைந்த விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் என் டி சி ஆலைகள் லாபகரமாக இயங்காததே தொடர்ந்து செயல்படாததற்கு காரணமாக உள்ளது என்று கூறினார்.








