கேரளாவில் 8வது நாளாக நடைபயணத்தில் சிவகிரி மடத்திற்கு சென்ற ராகுல் காந்திக்கு, முன்னர் ராஜீவ்காந்தி வந்த புகைப்படத்தை துறவிகள் ராகுல் காந்திக்கு பரிசாக அளித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7-ம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கி இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் மொத்தம் 150 நாட்களுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் நடைபயணம் தற்போது 8வது நாளாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 3 நாட்கள் பயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி, கடந்த 11-ம் தேதியில் இருந்து கேரளாவில் நடைபயணத்தை தொடங்கினார்.
ராகுல்காந்தி இன்று 8வது நாளாக கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருந்து கொல்லம் மாவட்டத்திற்கு செல்கிறார். முன்னதாக கடந்த காலங்களில் ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் சிவகிரி மடத்தை பார்வையிட்டுள்ளனர். அதே வழியில் ராகுல் காந்தியும் இன்று சென்று வணங்கினார். அப்போது துறவிகள் உற்சாக அவருக்கு வரவேற்பு அளித்தனர். ராஜீவ்காந்தி வந்த புகைப்படத்தை பரிசாக அளித்தனர்.







