குரங்கு அம்மை நோய் உலகின் பல நாடுகளில் பரவி வருவதை அடுத்து அந்நோயை சர்வதேச மருத்துவ அவசர நிலை நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் இதனை அறிவித்தார்.
அப்போது உலக சுகாதார நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குரங்கு அம்மை சர்வதேச அளவில் மிக வேகமாக பரவுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணங்களை முடக்க வேண்டிய அளவுக்கு நிலைமை இல்லை என்றாலும், பாதிப்பின் தன்மை தீவிரமாக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லாத நாடுகளிலும்கூட இந்த நோய் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், சர்வதேச மருத்துவ அவசரநிலையை பிரகடனப்படுத்துவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய விதிகள் இந்நோய்க்கு பொருந்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.









