கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தையும், அகழ் வைப்பகத்திற்கான கட்டுமானப் பணியையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட உள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஏழு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடந்துள்ளன. அதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடந்தன. 7-ம் கட்ட அகழாய்வுப் பணி செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இங்கு செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், பாசி மணிகள், தங்க ஆபரணங்கள், வெள்ளிக் காசு, தாயக்கட்டை, சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், எடைக்கற்கள் என பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
இதில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை தமிழ்நாடு தொல்லியல் துறை ஆவணப்படுத்தி வருகிறது. இந்தப் பொருட்களை, பொதுமக்கள் பார்வையிடும் வகையில், கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிற்பகலில் நேரில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.








