மன அழுத்தம் காரணமாகவே வீட்டிலிருந்து வெளியேறியதாக காணாமல் போன பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர்தட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி இந்துமதி. பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரான இந்துமதி கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து பிற சமூகத்தினர் அதிகம் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலின பிரிவினருக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டத்தை கண்டித்து நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் இந்துமதி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்துமதியை எதிர்த்து யாரும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு
போட்டியிடாததால் இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் பாண்டியன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அனைவருக்கும் அப்பகுதியில் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்துமதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து
நீதிமன்றத்தில் நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்துள்ள
நிலையில் அவ்வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது. இதனால் பாண்டியனின் உறவினர்கள் மலை கிராமத்தை விட்டு வெளியேறி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
பாண்டியன் தனது மனைவி இந்துமதி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் மலைகிராமத்தை விட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை
வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை
அன்று இந்துமதி கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு
வெளியேறியுள்ளார். பின்னர் வெகுநேரம் ஆகியும் இந்துமதி வீடு திரும்பாததால்
பாண்டியன் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்
மேலும் இந்துமதி காணாததை குறித்தும் நாயக்கனேரி பகுதியை சேர்ந்த சிவக்குமார்
உள்ளிட்ட சிலர் மீது சந்தேகம் உள்ளதாகவும் இந்துமதியின் கணவர் பாண்டியன்
ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற
போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி காவல் நிலையத்திற்கு திடீரென வந்தார். நிலுவையில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பிரச்னை தொடர்பான விவகாரத்தில் சிலர் தன்னை வற்புறுத்துவதகாவும் ,இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதில் மனமுடைந்து வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டதாகவும் ,கணவன்
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள தொலைக்காட்சிகளில் வந்த செய்தி அறிந்து
காவல் நிலையத்துக்கு வந்ததாக காவல் துறையினரிடம் அவர் தெரிவித்தார்.
மேலும் காவல் நிலையத்திற்கு வந்த பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதியை போலீசார் விசாரணைக்குப் பின் கணவருடன் அனுப்பி வைக்க உள்ளனர்.