ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமணமான ஆண்களும், பெண்களும் வெள்ளை ஆடை மட்டுமே அணிந்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இலந்தைகுளம் கிராமம் உள்ளது. அங்கு வசிக்கும் ஒரு சமூகத்தினர் பல தலைமுறைகளாக வெள்ளை ஆடையை உடுத்தி வருகின்றனர். முன்பு, கணவன் இறந்த பின்பு பெண்கள் உடுத்தும் வெள்ளை சேலை வழக்கத்தை, தற்போது திருமணமாகி கணவன் உயிருடன் இருக்கும்போதே 24 மணி நேரமும் பெண்கள் வெள்ளை சேலை கட்டி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிறுவர்களும் வெள்ளை உடைகளையே அணிந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு சீருடை அணிந்து சென்றாலும் பள்ளி முடிந்து வந்த பின்பு வெள்ளை ஆடை அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெள்ளை நிற ஆடை உடுத்துவது ஏன்?
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் புஷ்பலதா கூறுகையில்:
“நாங்கள் பொட்டு வைப்போம், பூ வைப்போம், நகை அணிவோம். ஆனால், நாங்கள் வணங்கும் பொம்மியம்மாள் என்ற சாமிக்காக வீட்டில் இருந்தாலும் , வேலைக்கு சென்றாலும் வெள்ளை ஆடை மட்டுமே அணிவதாக”
மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மூக்கம்மாள் என்ற மூதாட்டி கூறுகையில்: சேலையில் ஒரு கலர் நூல் இருந்தாலும் அதை அகற்றி விடுவதாகவும் சுடுகாடு செல்லும் வரை வெள்ளை சேலை மட்டுமே உடுத்துவதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர், வெளியூரில் வேறு வேறு நடைமுறை
மேலும், பஞ்சவர்ணம் என்ற பெண் கூறுகையில்: “எங்கள் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு திருமணமாகி செல்லும் பெண்கள் திருமணமான பின்பு கலர் ஆடை உடுத்திக் கொள்ளலாம் என்றும், வேறு பகுதியிலிருந்து தங்கள் பகுதிக்கு திருமணமாகி வரும் பெண்கள் நிச்சயம் செய்யப்பட்ட நாளிலிருந்து உயிரிழக்கும் வரை வெள்ளை ஆடை மட்டுமே உடுத்த வர வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
அப்பகுதியில் வசிக்கும் முதியவர் சோலைமலை கூறுகையில்: ஆண்களும் வெள்ளை உடை மட்டுமே உடுத்துவோம். எங்களது சாமிக்காக பரம்பரை பரம்பரையாக இது போன்று ஆடை அணிவதாக தெரிவித்தார். இவ்வாறு தங்களது சாமிக்காக தலைமுறை தலைமுறையாக வெள்ளை ஆடை அணிந்து வரும் அப்பகுதி மக்களின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-பவானி