பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம் என்று திருக்குவளையில் கலைஞர் இல்லத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பெழுதி கையெழுத்திட்டார்.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் பிறந்த இல்லமான நாகை மாவட்டம் திருக்குவளை இல்லத்திற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக கலைஞர் பிறந்த இல்லத்திற்கு வருகைதந்த உதயநிதிக்கு திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையிலான திமுக தொண்டர்கள் நாகை மாவட்ட எல்லையான கொளப்பாடு பகுதியில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருக்குவளை இல்லம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கலைஞரின் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலைஞரின் பிறந்த இல்லத்தில் உள்ள கலைஞரின் தாய் தந்தை அஞ்சுகம் முத்துவேல், மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்மைச் செய்தி:மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!
தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுகவினர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் பேட், பந்து உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை பரிசாக வழங்கினார். பின்னர் கலைஞர் இல்ல நினைவகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட அவர், 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சார துவக்கம் 2020 நவம்பர் 20ஆம் தேதி கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லத்தின் முன்பு தொடங்கி கைதானோம். இன்று அமைச்சராகி முதல் முறை மீண்டும் வருகை புரிந்துள்ளேன் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம் என குறிப்பெழுதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார்.







