மதுரையில் தனது பெரியப்பா மு.க.அழகிரியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடா வருடம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு
நடைபெறுவது வழக்கம். 15ம் தேதி அவனியாபுரத்திலும், இன்று (16ம் தேதி) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் நாளை எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
நாளை நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க சற்று முன் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்திலிருந்து அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றுவிட்டு அதன் தொடர்ச்சியாக டி.வி.எஸ் நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு மு.க.அழகிரியின் காலில் விழுந்து பின்னர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்து மு.க.அழகிரி ஊடகங்களிடம் தெரிவித்த போது “பெரியப்பாவை பார்க்க எனது தம்பி மகன் வந்துள்ளார். தம்பி முதல்வரானதும், மகன் அமைச்சரானது மகிழ்ச்சி . உதயநிதி ஸ்டாலின் வந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, அன்பில் மகேஷும் எனக்கு இன்னொரு மகன் தான் ” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
மீண்டும் திமுகவில் இணைவீர்களா என பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அழகிரி “ அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்”என தெரிவித்தார்
அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரை மு.க.அழகிரி வாசலில் வந்து மு.க.அழகிரி வரவேற்றார். அழகிரி மற்றும் உதயநிதியின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி வருவதாக சொல்லப்படுகிறது.







