அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டையடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பாஜகவின் மிரட்டல் அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப்பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். மேலும் மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையுடன் சோதனை நடத்துவது, அரசியல் சட்ட மாண்பைக் காக்கும் செயலா என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் தொடர் 17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டன.
இந்நிலையில் அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, சேகர்பாபு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் மற்றும் எம்பியும் வழக்கறிஞருமான என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து விசாரித்தனர். மத்திய அரசின் திட்டமிட்ட பழிவாங்கும் செயல் இது என்றும், மிசாவையே பார்த்தது திமுக; இதற்கெல்லாம் அஞ்சாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். மருத்துவமனை சென்று செந்தில் பாலாஜி உடல்நலம் விசாரித்து திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.







