எவருடைய வருகையும் அதிமுகவின் வெற்றியில் பின்னடைவை ஏற்படுத்தாது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட முதலியார் குப்பத்தில் அம்மா மினி கிளினிக்கை தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். சசிகலா விடுதலை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், சசிகலாவின் வருகை அதிமுகவை வலுவுபடுத்துமே தவிர பின்னடைவை ஏற்படுத்தாது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ‘திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார். உண்மை அவருக்கே தெரியும்; வெற்றி பெறாத திமுக ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொல்லி வருகிறது. ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என நினைத்து வருகிறது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்பதை அவரது உடல் அமைப்பு வெளிபடுத்துகிறது’ என விமர்சனம் செய்துள்ளார்.







