முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கிற்கு, தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது, அதனைத் திறக்க அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் சிலை, அவரின் சொந்த ஊரில் நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுகுறித்து அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு மத்தியில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுயிக். அவரது இந்த சேவையை போற்றும் விதமாக பென்னிகுயிக் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும் என பென்னிகுயிக் பிறந்த நாளான கடந்த ஜனவரி 15-ம் நாள் அறிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பின்னர் சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலையும் பெற்றனர். தற்போது கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில் கர்னல் பென்னிகுயிக் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று இரவு 2 மணி அளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டன் கிளம்பி சென்றார்.
முன்னதாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுவிக் சிலையை திறப்பதற்காக முதலமைச்சரின் பிரதிநிதியாக லண்டன் செல்கிறேன். லண்டன் மாநகர் முதல்வர் ஆணையிட்டு வருகிற 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு கேம்பர்ளியில் இந்த சிலை திறக்கப்பட இருக்கிறது எனக் கூறினார் .
மேலும் முல்லை பெரியார் அணையின் நீர் தேக்கத்தின் மூலமாக மதுரை ராமநாதபுரம் தேனி திண்டுக்கல் ஊள்ளிட்ட பகுதியில் முழுமையாக இரண்டு லட்சம் விவசாயிகள் அணையினால் பயன் பெறுகின்றன. இந்தத் திட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது என்றும் கூறினார். தமிழக முதலமைச்சர் சில பணிகளின் காரணமாக லண்டன் செல்ல முடியாத காரணத்தால், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி முதலமைச்சரின் பிரதிநிதியாக நான் செல்கிறேன் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.