அதிமுக எதிர்க்கட்சி தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்கவேண்டும் என எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டபோது, பேரவை தலைவர் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள் என அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு பேசினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது, அதிமுக எதிர்க்கட்சி தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பியதால் கூட்டத்தொடர் பரபரப்புடன் காணப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, கேள்வி நேரம் முடிந்ததும் தங்களுக்கு பேச வாய்ப்பு தருவதாக பேரவை தலைவர் அப்பாவு அதிமுக எல்எல்ஏக்களிடம் தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சை கேட்காத உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, குறுக்கிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், அதிமுக எம்எல்ஏக்கள் அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தினார். விரும்பத்தகாத நிகழ்வை அதிமுகவினர் நடத்திக்காட்டியிருக்கிறார்கள். தகுந்த பதிலை சொன்னபோதும், சபை மாண்பை எதிர்க்கட்சி தலைவர் குலைத்துள்ளார். திட்டமிட்டு கலகம் செய்யும் நோக்கிலேயே அதிமுகவினர் வந்தனர் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்தி எதிர்ப்பு என்பது ஊனோடும், உயிரோடும் கலந்துவிட்ட ஒன்று. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை ஆகியவையும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது என்றார். விசாரணை அறிக்கைகள் மீது விவாதம் நடத்தியிருக்க வேண்டும். உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடக்கூடாது என்ற பயம் அதிமுகவினருக்கு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
எனவே, சபாநாயகர் என்ன முடிவு எடுக்க வேண்டுமே எடுக்கலாம் என தெரிவித்து அமர்ந்தார். இதைகேட்டறிந்த பின்னரும் பேரவை தலைவர் அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால் அவர்கள் கேட்காததையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் இன்றும், நாளையும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என அப்பாவு தெரிவித்தார். ஆனால், அவை முனைவரான அமைச்சர் துரைமுருகன் இனி நடப்பது நல்லதாக நடக்கட்டும் என்றும், அதிமுக பேரவை உறுப்பினர்களை மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு, நாளைய கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளலாம் என்றார்.