இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்கு உரியது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் வீரவேல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “மயிலாடுதுறை மீனவர் வீரவேல் இந்திய கடற்படையால் சுடப்பட்டுள்ளார். வயிறு மற்றும் தொடையில் குண்டு பாய்ந்துள்ளது. காரைக்காலில் இருந்து 15ம் தேதி இரவு காரைக்காலை சேர்ந்த 3 பேரும், நாகையைச் சேர்ந்த ஒருவரும், மயிலாடுதுறையை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 10 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார்கள். தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இந்திய கடற்படை வீரர்கள், நம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். மீனவருக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மீனவர் வீரவேல் சுய நினைவுடன் உள்ளார், அவரை காப்பாற்றி விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “தமிழக மீனவர்களை நம் இந்திய கடற்படையே சுட்டது மிகுந்த வருத்தத்துக்குரியது. இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்திய கடற்படையின் தாக்குதல் மிகுந்த கண்டனத்திற்கு உரியது, Pellet என சொல்லப்படக் கூடிய சிறிய ரக குண்டுகள் 4 பாய்ந்து உள்ளன. உடலில் 5 இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

அத்துடன், இந்த விவகாரம் குறித்த இந்திய கடற்படையிடம் விளக்கம் கேட்கப்படும், நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமருக்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவிப்பார் எனவும் விவரித்தார் அமைச்சர்.







