மாணவர்கள் புகார் தெரிவிக்க உதவி எண் இனி பாடப்புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்படும்: அன்பில் மகேஸ்
திருச்சியில் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சிப் பணிமனையினை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறையை, மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்ல உள்ளதாகக் கூறினார். மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரச்னை என்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்பதால், பல பள்ளிகள் பிரச்னைகளை விசாரிக்காமல் விட்டு விடுகின்றனர் என்றார். எனவே, பள்ளிகளில் பிரச்னை ஏற்படும் போது பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்யக் கூடாது என்றும் மாணவர்களின் நலம் கருதி உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரித்தார்.
மேலும் பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் 14417, வரும் காலங்களில் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.







