கட்- அவுட், பேனர் கலாச்சாரம் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

கட்- அவுட், பேனர்களை வைக்கக் கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுகதான், கட்சியினர் அதை மறந்து விடக்கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுகவினரிடம் கேட்டுக்கொண்டார். திருச்சி தெற்கு மாவட்ட…

கட்- அவுட், பேனர்களை வைக்கக் கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுகதான், கட்சியினர் அதை மறந்து விடக்கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுகவினரிடம் கேட்டுக்கொண்டார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

செப்டம்பர் 1ம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தான் முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்த முறையான “செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டம்” நாளை நடைபெற உள்ளது. அதில் முதல்வருடன் ஆலோசித்த பின்னர் தான் முடிவு எடுக்கப்படும்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியில் உள்ள அனைவரும் தடுப்பூசி கள் போட்டுள்ளார்களா என்பதை அந்த அந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டு உறுதி செய்து வருகிறோம். மாணவர்கள் இடை நிற்றல் ( drop out) கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த லிஸ்ட் வந்தவுடன் அதை வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கட் – அவுட், பேனர்களை வைக்கக் கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுக என்பதை கட்சியினர் மறந்து விடக்கூடாது. போஸ்டர் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைபாடு. திமுகவினர் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவு றுத்தி வருகிறேன்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்விற்கு மிக மிக குறைவாகத்தான் தேர்வெழுத உள்ளனர். காரணம் கொரோனோ மற்றும் பள்ளிகள் இல்லாதது. நீட்டில் இருந்து விலக்கு பெறுவதே இந்த ஆட்சியின் லட்சியம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.